--> -->

வெடிப்புக்குள்ளான குளத்தின் அணைக்கட்டு படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அனர்த்தங்கள் தடுப்பு

நவம்பர் 16, 2020

வெடிப்புக்குள்ளான  ஊத்துக்குளத்தின்  அணைகட்டு  கொக்கெலியவில் உள்ள படையினரால் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் மூலம்  பரந்தளவிலான பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கும் மற்றும் தாழ்நில கிராமங்களுக்கும் ஏற்பட இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த சில நாட்களாகக் கிடைக்கப் பெற்று வரும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் வான் கதவு மட்டம் வரை அதிகரித்தது. இதனால் குளத்தின் அணைக்கட்டில் சுமார் 15 அடி நீளமுள்ள வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதன் மூலம் 74 ஏக்கர் தாழ்நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறி மற்றும் ஏனைய சேனைப் பயிர்ச்செய்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.


நெடுங்கேணி கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், 563 வது பிரிகேட்டின் கொக்கெலியாவையை தளமாகக் கொண்ட 7வது இலங்கை சிங்க படையினருடன் இணைந்து இந்த பிராந்தியத்தில் ஏற்படவிருந்த அனர்த்தத்தை தடுக்கும் வகையில் குளத்தின் அணைக்கட்டினை சீர் செய்தனர்.

வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மற்றும் 56வது  காலாட் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும்  அறிவுறுத்தலுக்கு அமைய இந்த புணர்நிர்மான பணிகளில் படை வீரர்களுடன் இணைந்து விவசாயிகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் 56 வது படைப்பிரிவின் பொது கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ பாதிக்கப்பட்ட இடத்தின் பழுதுபார்ப்பு பணிகளில் முழு வீச்சில் பங்குபற்றும் படையினரின் தேவைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.