--> -->

“நிவர்” சூறாவளி தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நவம்பர் 25, 2020

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “நிவர்” சூறாவளியானது நேற்று 2330 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளியானது  அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-80கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன்  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் மேக மூட்டமான வானிலை காணப்படும் எனவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, கடுமையான அல்லது மிகக் கடுமையான காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும்  கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.