--> -->

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

டிசம்பர் 13, 2022

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார்.

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ இராஜதந்திரம் தொடர்பில் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சுக்கான கடற்படை தளபதியின் விஜயத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், கடற்படை தளபதி விருந்தினர் புத்தகத்தில் தனது கையொப்பத்தை இட்டார்.

இந்த சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.