--> -->

பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு எச்சரிக்கை

மே 02, 2023

இன்று (02) வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் கேகாலை உள்ளிட்ட பல இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.