--> -->

இலங்கை மற்றும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான இராணுவ
ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்படும்

ஜூன் 09, 2023
  • சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ் அவர்கள் இன்று (ஜூன் 09) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சுக்கு வருகை தந்த சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் பிராங்கோயிஸ் ஆகியோரிக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புக்களால் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளரால் விளக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும் இதன்போது நினைவுகூரப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.