--> -->

மட்டக்களப்பில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

ஜூன் 12, 2023

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, மட்டக்களப்பு, சித்தாண்டியில் 4 வது கெமுனு ஹேவா படையணியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8.6 ஏக்கர் காணியை செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கிழக்குப் பாதுகாப்புப்படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் விடுவிக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அரச அதிகாரிகளை அந்த இடத்திற்கு வரவழைத்ததன் பின்னர், காணியின் அளவு தொடர்பான சட்ட ஆவணங்கள் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி கலாபதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேட்டினால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக 4 வது கெமுனு ஹேவா படையணி அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த காணியானது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 56 பேருக்குச் சொந்தமானது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் சட்டப்பூர்வ உரிமைகள் சரிபார்ப்பு மற்றும் ஏனைய தேவையான தகவல்கள், விவரங்கள் உரிய நேரத்தில் உரிய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

கிழக்கு தலைமையகத் தளபதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி - www.army.lk