--> -->

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜூன் 19, 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 67.5 மீற்றர் நீளமும், மொத்தம் 60 கடற்படையினரையும் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் திவாகர் எஸ் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றுக்காக இலங்கை கடற்படையின் ஒரு குழுவினரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘INS Vagir’ என்ற கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படையினர் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர், ‘INS Vagir’ என்ற கப்பல் வியாழக்கிழமை (ஜூன் 22) அன்று நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.