--> -->

விடைபெற்றுச் செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 13, 2023

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, திரு.வினோத் குரியன் ஜேக்கப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை 13) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக திரு.ஜேக்கப் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.