--> -->

விடைபெற்றுச் செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

ஜூலை 19, 2023

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, திரு.வினோத் குரியன் ஜேக்கப் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று (ஜூலை 18) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகைதந்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக திரு.ஜேக்கப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் சேவையைப் பாராட்டிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் புனீத் சுஷிலும் கலந்துகொண்டார்.