--> -->

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடற்படையினர் உதவி

ஆகஸ்ட் 09, 2023

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய மின்கி இனத்தைச் சார்ந்த திமிங்கலம் ஒன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பாதுகாப்பாக கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

சுமார் 20 அடி நீளமுள்ள இத் திமிங்கலமானது கடற்படையின் கரையோர கண்காணிப்பு குழுவினரால் இப்பந்திதீவு கடற்பரப்பில் ஆழமற்ற கடற்பகுதியில் வைத்து கண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திக்கு அறியப்படுத்திய நிலையில், கடற்படையின் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியினர் மீட்பு பணிக்காக உரிய இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (NARA) பணியாளர்களுடன் சேர்ந்து கடற்படையினரால் குறித்த திமிங்கலம் ஆழ்கடலை நோக்கி படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.