--> -->

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

ஒக்டோபர் 04, 2023

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (ஒக்டோபர் 04) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைக்கமைய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை (ஆம்பர்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலயாத்தில் நீர்கொழும்பில் அதிகபட்சமாக 98 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.