--> -->

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் போர்வீரர் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான மற்றுமொரு நிகழ்ச்சித் திட்டம்

ஜூன் 02, 2024

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு இன்று (ஜூன் 02) குருவிட்டவில் உள்ள இலங்கையின் இராணுவ கெமுனு வோச் படைப்பிரிவு முகாமில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்தத் தொடரின் மற்றுமொரு நிகழ்வு நேற்று (ஜூன் 01) தியத்தலாவ இராணுவத் தொண்டர் படைப் பயிற்சிக் கல்லூரியில் பாதுகாப்புப் படைகளின் மத்திய கட்டளைத் தளபதி அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது குறுப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுக்கு வருக தந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோனை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ வரவேற்றார்.

இராணுவத் தலைமையகம் ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களைக் கவனிப்பதற்காக இந்தத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற சேவையாளர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குறைகளை முன்வைப்பதற்காக இராணுவ அதிகாரிகள் அதன் ஏழு இயக்குநரகங்களின் கீழ் உதவி மையங்களை நிறுவியதுடன் குறித்த இராணிவ வீரர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இதன்மூலம் நிவர்த்தி செய்துகொண்டனர்.

அங்கு உரையாறிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், போரின் போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக போராடிய எமது வீரமிக்க போர்வீரர்களின் உன்னத சேவையை பாராட்டினார்.

மேலும், ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் கெளரவ ரமேஷ் பத்திரன அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச வங்கிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான உத்தேச மானியக் கடன் திட்டம் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், இது தொடர்பாக இலங்கை வங்கியின் தலைவருடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், காணிக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் உறுமய திட்டத்தின் கீழ் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காணி வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார். ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக எதிர்காலத்தில் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் வெளிநாட்டு வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்பும் போது ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை ஒதுக்கீடு வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்தவர்கள் தமது குறைகளை அமைச்சர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் முன்வைப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

கேகாலை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜயசிங்க, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.