--> -->

வாழ்க்கையில் முன்னேற இளைஞர்கள் சரியான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

ஜூலை 09, 2024

‘புத்திசாலித்தனம், அறிவு மற்றும் திறமை ஆகியவற்றைக் கொண்டிருப்பது போலவே சரியான அணுகுமுறையும் முக்கியம். மாற்றம் ஏற்படுவது கடினம் மற்றும் சில சமயங்களில் முதல் படியே கடினமானது’.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் திங்கட்கிழமை (ஜூலை 08) ஏற்பாடு செய்யப்பட்ட ‘05வது புதிய தலைமுறையினருக்கான ஆசிய இளைஞர் விருதுகள் 2024’ வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய தலைமுறை ஆசியாவின் தலைவர் திரு.ஓவின் அமரதுங்க, ‘Striving beyond the Status Quo’ ' என்ற தொனிப்பொருளின் கீழ் விருது வழங்கும் விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் புதிய தலைமுறைக்கான மகளிர் முகாமைத்துவம் (WIM) மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த சாதனைகள், தலைமைத்துவம், பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளுக்காக 33 பிரிவுகளில் இருந்து 40 திறமையான இளைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையின் புதிய தலைமுறைக்கான மகளிர் முகாமைத்துவ அமைப்பின் ஸ்தாபக தலைவியான டாக்டர்.சுலோச்சனா செகேரா அவர்களின் தொலைநோக்கில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், தனியார் துறைத் தலைவர்கள் மற்றும் இலங்கை வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.