--> -->

அரச வைத்தியசாலைகளில் இருந்து சுகாதார சேவைகளைப்
பெறுவதில் 'விருசர' சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை

ஜூலை 10, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, 'விருசர' சிறப்புரிமை அட்டை வைத்திருப்பவர்கள் அரச வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

'விருசர' அட்டை வைத்திருக்கும் போர்வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள், அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளிலும், மருத்துவம், பல், கண், குழந்தைகள் மற்றும் மகப்பேறு மற்றும் பிற கிளினிக்குகளிலும் சிகிச்சை பெறும்போது முன்னுரிமை சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கமைவாக, அனைத்து மாகாண சுகாதார சேவைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், உரிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்கள் ஆற்றிய மாபெரும் தியாகத்திற்கு தேசத்தின் நன்றியை தெரிவிக்கும் வகையிலும் இந்த நலன்புரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.