--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகம் தம்புள்ளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

ஜூலை 21, 2024

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு உப கிளையாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ள 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகத்தின் திறப்பு விழா நிகழ்வு இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபையின் தலைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்,

நெடுஞ்சாலைகள், பாலங்கள் போன்ற பாரிய பௌதீக அபிவிருத்தித் திட்டங்களால் மாத்திரம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததன் விளைவாகவே அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்தப் பல்கலைக்கழக அமைப்பை இங்கு உருவாக்கத் தீர்மானித்தோம். மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமய ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்ததுடன், தம்புள்ளை மக்களுக்கு உயர்தர கல்வியை வழங்கும் முதலாவது கல்வி வளாகத்தை உத்தியோகபூர்வமாக இதன்போது அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மேற்படி திட்ட தொடக்க விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்றார்.

மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரமுகர்களுக்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் Built Environment and Spatial Sciences (BESS) பீடத்தால் குறித்த திட்டம் தொடர்பான விரிவான விளக்கக்காட்சியும் இங்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வண. மகாசங்கத்தினர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதி உபவேந்தர்கள், பீடாதிபதிகள், பீடங்களின் உறுப்பினர்கள், நிர்வாகப் பணியாளர்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கெடட் மாணவர்கள், பாடசாலை கெடட் மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.