மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்

மார்ச் 19, 2025

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர் ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத், செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மாலைத்தீவு உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதி அமைச்சர் அவருடன் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நீண்டகால நட்பை நினைவுகூர்ந்த அவர்கள் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

மாலைத்தீவு உயர்ஸ்தானிகர், வருடாந்திர வதிவிட விசாக்களைப் பெறுவதில் மாலைத்தீவு பிரஜைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரிவித்ததுடன் பாதுகாப்பு அனுமதி வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தவும் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான தங்கள் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். மாலைத்தீவு துணை உயர் ஸ்தானிகர் திருமதி பாத்திமத் ஜினா மற்றும் அமைச்சர் ஆலோசகர் திருமதி ஹலீமத் சிஸ்னா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.