இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு
ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது
ஏப்ரல் 07, 2025
இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 06) கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பலான சஹ்யத்ரிக்கு மேட்கொண்ட விஜயத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கப்பலுக்கு வருகை தந்த பிரதி அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் ரஜத் குமார் வரவேற்றார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜாவும் கலந்து கொண்டார்.
தனது உரையின் போது பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர, இந்து சமுத்திரம் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய உயிர்நாடியாக உள்ளதினால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்று தெரிவித்தார். இலங்கையின் கடல்சார் திறன்களை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் பாதுகாப்பான கடல் சூழலை உறுதி செய்வதிலும் இந்தியாவின் ஆதரவை பாராட்டுகிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகித்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் மனிதாபிமான முயற்சிகளில் இந்தியாவின் தொடர்ச்சியான உதவியை அவர் பாராட்டினார்.
21 ஆம் நூற்றாண்டின் சவால்களை நாம் கடந்து செல்லும்போது, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு சவால்கள், போதைப்பொருள் கடத்தல், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில், நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் ன்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை இந்திய கப்பலில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள், இராஜதந்திரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா மற்றும் பங்களாதேஷை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.