--> -->

சூழல் மாசுபாடும் விதத்தில் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை அமுல்

ஏப்ரல் 06, 2019

சூழல் மாசுபாடும் விதத்தில் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஏப்ரல், 05) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது அபிவிருத்தியடைந்த மற்றும் ஒழுக்கமான நாட்டை உருவாக்கும் வகையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

105 டெசிபல் ஒலி அளவிற்கு மேல் சத்தத்தை ஏற்படுத்தி சட்டத்தை மீறும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை அமுல்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குமாறு போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன்போது பாடசாலை மாணவர்கள், பிரயாணிகள் மற்றும் சாரதிகள் ஆகியோருடன் “அமைதி தினம்” அனுஷ்டிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் உடன்பட்டமை இக்கலந்துரையாடலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் உட்பட 22 நிறுவனங்களின் பிரதிநிதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், இலங்கை சுங்கத்திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்

ஜனாதிபதியின் “சுரகிமு ஸ்ரீ லங்கா“ ஏற்பாடு செய்திருந்த இந்நகழ்வில் சங்கைக்குரிய பஹியங்கல ஆனந்த தேரர் அவர்களும் கலந்துகொண்டார்.