--> -->

ஜனாதிபதி அவர்களின் புனித வெசக் நோன்மதி தினச் செய்தி

மே 26, 2021

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் எமது பௌத்த பாரம்பரியமாகும்.

கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும், உலகளாவிய கோவிட் தொற்றுநோய் காரணமாக, சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் கூட்டு சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் மூன்று உன்னத விழாக்களை நினைவுகூர்ந்து தத்தமது வீடுகளில் தங்கியிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு அதனை தடையாக கொள்ளத் தேவையில்லை.

அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் படி, அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமை என்பதுடன், பௌத்தர்களின் இந்த உயர்ந்த பண்பினை உலகிற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

நாட்டின் தற்போதைய தொற்றுநோய் நிலைமைகளை கருத்திற் கொண்டு ஒரு அடையாளமாக மட்டும் வெசக் வைபவத்தை நடத்துமாறு மூன்று நிகாயக்களையும்  சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் வழங்கிய ஆலோசனையை நாம் மனதிற் கொண்டு, நாட்டின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டு உன்னதமான முப்பெரும் விழாவை பக்திபூர்வமாக அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘சுதுத்தசங் சுனிபுனங் – யத்த காமனிபாதினங்

சித்தங் ரக்கேத மேதாவி – சித்தங் குத்தங் சுகாவஹங்’

“மனதின் உண்மையான நிலையை அறிந்து கொள்வது மிகவும் கடினமானதாகும். அதேபோல் இந்த உள்ளத்தின் செயற்பாடு மிக மிக நுண்ணியமானதாகும். தன் இஷ்டப்படி தான் ஆசைபடுவதன் பின்னாலயே இந்த மனம் அலைந்து கொண்டிருக்கிறது. ஞானமுள்ள ஒருவர் தான் இந்த மனதினை தவறான பாதைக்கு செல்லாது பாதுகாத்துக்கொள்வார். நன்றாக பாதுகாத்துக்கொள்ளும் மனதினால் பெரும் சுகத்தினை பெறலாம்” என தம்மபதம் தெளிவுபடுத்துகிறது. அனைவரும் ஒரு தேசிய பேரனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருக்கும் ஒரு சூழ்நிலையில், தம்ம பதத்தின் இந்த அறநெறிகள் குறித்து கவனம் செலுத்தி மனதை அமைதிப்படுத்தி அறிவுபூர்வமாக செயற்படுவது எமது சமூக பொறுப்பாகும்.

எமது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களினதும் உடல், உளத் துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று இந்த உன்னதமான வெசக் காலத்தில் நான் உளப் பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

 

கோட்டாபய ராஜபக்ஷ

25 மே 2021

நன்றிwww.pmdnews.lk