--> -->

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு

ஜூலை 13, 2021

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேல் மாகாண ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஜூலை, 12) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் போது, மேல் மாகாண, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடபட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கல்வி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை முன்னுரிமைப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக வலயக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய பயிற்சியாளர்கள், கல்வி நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் பாடசாலைகளுக்கான பாடத்திட்ட வல்லுனர்கள் ஆகியோருக்கு மஹரகமவிலுள்ள தேசிய கல்வி நிறுவகத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் திட்டம், கல்வி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஜி எல் பீரிஸினால் மேற்பார்வை செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியிர் கே.கபில பெரேரா, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.