--> -->

யாழில் 65 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூலை 27, 2021

யாழ்ப்பாணம், காங்கேசந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 216.750 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

குறித்த பகுதியில் வடக்கு கடற் படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சூட்சமமான முறையில் ஆறு சாக்கு பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி 65 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த நடவடிக்கையின் போது 19 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் காங்கேசன்துறை வலாலை பகுதியை சேர்ந்த 22 முதல் 34 வயதுகளை உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, உலர்ந்த மஞ்சள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட படகு என்பனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.