--> -->

சந்தஹிருசேய தூபி இவ்வாண்டு நவம்பரில் பக்தர்களின் வழிபாட்டுக்கு வழங்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

செப்டம்பர் 25, 2021

சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அதுஇந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் வழிபாடுகளுக்காக வழங்கப்படுவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் திட்டம் 2010ம் ஆண்டு ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கெளவரவ மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டது எனவும், தற்போதை ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்றைய தினம் (செப்டம்பர் 25) அனுராதபுரத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அவர் அருங்காட்சியகம், வருடத்தின் 12 மாதங்களும் எரியும் விளக்கு, திண்ணை மண்டபம், புனித அறைகள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பக்தர்களுக்கான வாகன தரிப்பிடம், புனித கற்களால் அமைக்கப்பட்ட சலபதல மலுவ மற்றும் அதன் நீரியல் குளிரூட்டும் அமைப்பு மற்றும் தரைத்தோற்ற வடிவமைப்பு என்பன தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிர்மாணப்பணியின் இறுதி ஏற்பாடாக தூபியின் முனையில் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் ‘கோபுர கலசம்’ என்பவற்றை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரு புனித வஸ்த்துக்களும் தற்போது களுத்துறை போதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தில் கட்டிட கலைஞர்கள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், பிராந்திய சிரேஷ்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் திட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.