--> -->

கிழக்கில் இயற்கை விவசாய நெற்செய்கை அறுவடை

ஜூலை 21, 2022

கிழக்கு பிராந்தியத்தில் இயற்கை முறை நெற்செய்கை மூலம் 1750 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ ஊடகங்களின்படி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-E) 22 வது பிரிவின் 223 படைப்பிரிவின் 6 வது இலங்கை கவசப் படையின் (SLAC) துருப்பினர் மயிலவெவை பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறை நெற்செய்கையை மேற்கொண்டனர்.

சேதனப்பசலை பயன்படுத்தி இராணுவ படையினரால் மேட்கொள்ளப்பட்ட இந்நெற்செய்கை கடந்த சனிக்கிழமை (16 ஜூலை) பாரம்பரிய முறைப்படி அறுவடை செய்யப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இயற்கை விவசாய திட்டத்திற்கு அமைவாக இராணுவத் துருப்புக்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைவிடப்பட்டிருந்த 1.5 ஏக்கர் வயல் நிலத்தில் இயற்கை முறை நெற்செய்கையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 22 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.