--> -->

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

ஜனவரி 10, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 800 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கடந்த திங்களன்று ( ஜனவரி, 07) நடைபெற்ற வைபவத்தின் போது புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவியானது, பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் டயலொக் அக்சியடா பி.எல்.சி. ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மொத்தமாக 1.55 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 838 பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், குறித்த மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பனவற்றை விநியோகிக்கும் நிகழ்வு கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்புப்படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேர, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதியுதவியளித்த அமைபுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.